Pages

Saturday, August 6, 2011

விண்ணைக் கிழிக்கும் கீறல்கள்

"ஏய் எரும மாடு.. என்ட உயிர வாங்குறதுக்கு எண்டே வந்து பிறந்திருக்குது.. எத்தின தரம் உனக்கு நான் சொல்லிப்போட்டன்.. அந்த தண்ணிய எடுத்து விளையாடாத எண்டு .."

தேவி, போன வேகத்தில் தனது மூன்று வயதுக்குழந்தையின் முதுகில் ஒரு அடி வைத்தாள். குழந்தை அழவில்லை.. குழந்தையின் முகத்தில் அடி வாங்கியதற்கான எந்த ஒரு சாயலும் தென்படவில்லை.. குழந்தை தற்காலிக கொட்டிலின் வாயிலை நோக்கி நடந்தது. வாசலில் நின்று தனது  கைகளை தட்டி, ஒட்டியிருந்த ஈரமணலை அகற்றியது. வாசலில் நின்று தன்னை அடித்த அம்மாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்த அந்த பிஞ்சு மறுகணம் கொட்டிலினுள் ஓடி மறைந்தது.

தேவியின் மனதில் ஒரு வலி ... அவள் குழந்தைக்கு அடித்த அடி ஆயிரம் இடிகளாக மாறி அவளுடைய நெஞ்சில் இறங்கியது. துளிர்த்திருந்த கண்ணீரை துடைத்து விட்டு கொட்டிலினுள் நுழைந்தாள்.

தேவி.. முழுப்பெயர் தேவதர்ஷினி.. பெயருக்கேற்ற தோற்றம். வெயிலில் சுடுபட்டு கறுத்து இருந்தாலும் சாயல் பொருந்திய முகம். இருபத்து மூன்று வயதில் நாற்பது வயதுக்குரிய முதிர்ச்சி தெரிந்தது. பதினேழு வயதில கலியாணம்.. பதினெட்டு வயது தொடக்கம் இருபது வயது வரை வரிசையாக மூன்று குழந்தைகளை பெற்று எடுத்திருந்தாள். புருஷன் கடைசிச்சண்டயில தொலஞ்சு போனான்.. ரெண்டு வருசமா எல்லா "புனர்வாழ்வு"முகாம்களிலேயும், சிறைச்சாலைகளிலேயும் தேடியாச்சு.. செல் விழுந்து அப்பாவும் அண்ணாவும்  சொர்க்கத்துக்கு சுகமாக போய்விட்டார்கள். நரகத்துல இவளும் குழந்தைகளும், காலிழந்த அம்மாவும் அவதிப்பட கடவுள் வழிவகைகள் செய்திருந்தார்.

புதுக்குடியிருப்பில ஒரு அறை ஒரு விறாந்தையுடன் ஒரு கல்லு வீடு இருந்தது.. இப்ப இருக்காது எண்டு மட்டும் அவளுக்கு தெரியும். மீள்குடியேற்றத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தந்த தற்காலிக "பேக்கரி" கூடாரத்தில கிளிநொச்சி புறநகர் பகுதியில வசிக்க வேண்டிய கட்டாயம். கடைசி அஞ்சு வருசமா மெலிஞ்சு நிறைகுறைஞ்சு வந்தவள் (இரும்புச்சத்து குறைவால... இரத்தச்சோகை இருந்ததாம்) யுத்த காலப்பகுதியில் ஒரே நாளில் ஒரு கிலோ கூடினாள். வெடிச்ச செல் பீசுகள் இன்னும் தொடையிலும் வயித்துப்பகுதியிலும் இருந்தன. (உடம்பில தேவைக்கதிகமாகவே இரும்பு வந்து சேர்ந்தது ).. எல்லா தாக்குத்தர்களும் இவ்வளவு காயம் பட்டு தப்பினதே பெரிய விஷயம் எண்டு கதச்சவ.. பீசுகள எடுக்க முடியாதாம்.. ஏதோ முக்கியமான நாடி நரம்புகள் பக்கத்தால போகுதாம். படுபாவிக்கடவுள்.. எனக்கு அதில எதாவது ஒண்டுல பட்டு சாவு வந்திருக்க கூடாதா? என்று நினைத்து மறுகணமே குழந்தைகளுக்காக உயிர் வாழவேணும் என்ற வெறி, கவலையும் வேதனையையும் மிஞ்சும்.

"இவனுக்கு நாலு நாளா காச்சல் நெருப்பா காயுது.. இண்டைக்காவது கொண்டு போய் காட்டு" செல்லம்மா முனகினாள். 

"ம்ம்..

ரெண்டாவது குழந்தைக்கு காய்ச்சல்.. இண்டைக்கு வேலையில இருந்து அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு வந்து பிள்ளைய இடாக்குத்தரிட்ட கொண்டு போயிரோணும்.
செல்லம்மாவை தூக்கிக்கொண்டு காட்டுப்பக்கம் போய் காலைக்கடன் கழிக்க விட்டாள். கையப்புடிச்சுக்கொண்டால் தான் அவவால குந்த முடியும். ஒரு கால் தானே இருக்கு. ஒரு பிளாஸ்டிக் கதிரில ஓட்டை போட்டு வச்சிருந்தவள். அதுவும் ரெண்டு மாசத்துக்கு முதல் உடைஞ்சு போயிற்று. ரோட்டோரமா பொறுக்கின கதிரைக்கு உத்தரவாதம் யாருட்ட கேட்கிறது.

"கெதியா போவன்.. வேலைக்கு நேரம் போயிற்று. அந்த மனுஷன் கத்தியே கொண்டு போட்டுருவான். இண்டைக்கு லீவு வேற கேட்கோணும்" தேவி அம்மாவை அவசரப்படுத்தினாள்.

"வந்தாத்தானே போகலாம்" செல்லம்மாவுக்கு மலச்சிக்கல் வேறு. பத்து நிமிடம் போராடிப் பார்த்தாள். ம்ம்ஹும் .. வரவில்லை.

"பிள்ளை!! என்னக்கொண்டுபோய்  படுக்க வை .. நாளைக்கு பாப்பம்"

மீண்டும் அம்மாவை தூக்கி கொண்டு போய் படுக்க வைத்தாள் .. 

"நான் மத்தியானம் வந்து கஞ்சு வடிச்சு தந்துட்டு இவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறன்." 

டி சேர்ட்டையும் ஜீன்சையும் தூக்கி மாட்டினாள்.. "மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பிரிவு" என்று அதில் பொறிக்கப்பட்டு இருந்தது.

காலையில் தன்னிடம் அடி வாங்கிய குட்டிக்கண்மணிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு.. அவசர அவசரமாக ஓடினாள்.


****  ****  ****  ****

ஒரு நாள் முழுக்க வேலை செஞ்சால் முன்னூறு ரூபா. ஏதோ "அந்தக்காசு இந்தக்காசெல்லாம்" கழிச்சு இருநூற்று அறுபத்து மூன்று ரூபா வரும். கிழமையில அஞ்சு அல்லது ஆறு நாள்தான் வேலை. உயிர அடகு வச்சு செய்யிற வேல.. கண்ணி வெடி  வெடிச்சா பிள்ளைகள் எல்லாம் ரோட்டுல தான். வேலைக்கி போற எல்லாரையும் காலயில ஆறரைக்கு லாரி வந்து ஏற்றிப்போகும். அது பள்ளம் மேடு பாக்காத லாரி.. எல்லாத்துக்குள்ளயும் விழுந்து எழும்பி ஓடும். இடுப்பெலும்புகள் இரவில் இரக்கும் போதுதான் வேதனை தெரியும். போட்டிருக்கும் நீலச்சட்டை வேலைத்தளத்தை அடையும் போது செம்மண் கலரில் இருக்கும். சட்டை மட்டுமல்ல தலை முகம் எல்லாம்.. பழக்கப்பட்டுவிட்டது.. 

வேலை செய்யும் போது ஓய்வெடுக்க நேரமிருக்காது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டளவு பரப்பளவு ஒதுக்கப்பட்டு இருக்கும். அதை மேற்பார்வை செய்ய ஒரு மேற்பார்வையாளர். அவரிடம் தான் லீவு கேட்கவேண்டும். கடிதமொண்டும் எழுத வேண்டும். மெடிக்கல் சர்டிபிகட் இல்லையெண்டால் வேல வேற போயிரும்.


மகனின் நினைவு வந்தது.. காய்ச்சல்.. தொடந்து காச்சல் தான், மருந்தெடுக்க போனா ஒரு நாள் முழுக்க லைன் இல நிக்க வேணும். இதாக்குத்தர இரண்டு நிமிஷம் பார்க்க நாலு மணித்தியாலம் காக்க வேணும்.பிறகு மருந்தெடுக்க.. சில மருந்து இருக்காது.. வெளியில வாங்க வேணும்.. ஆஸ்பத்திரிக்கு போனா வேலைக்கு போக ஏலாது. வேலைக்கு போனாத்தான் கஞ்சு.. இல்லாட்டி பட்டினி தான். (அம்மா பசிக்குது பசிக்குது). இரத்தம் முழுக்க பாலாக்கி குழந்தைகளுக்கு கொடுத்தாகிற்று. மூண்டு பிள்ளைகளுக்கும் அவள் ஒருத்தியால் பால் கொடுக்க முடியுமா? எல்லாரும் பால மறக்க வை மறக்க வை எண்டு சொல்லுகினம். அப்ப பாலுக்கு பதிலா என்னத்த கொடுக்க? வேணுமே!!

இடம் வந்துட்டு.. இறங்குவம் 

****  ****  ****  ****


"ஐயா" 

"ஆ.. தேவி.. என்ன விஷயம். என்னோட கதைக்கவே மாட்டியே. இண்டைக்கு என்ன? "

தேவியின் கண்களை பார்த்து அவன் கதைக்கவில்லை. டி சேர்ட்டில் எழுதியிருந்த வாசகங்களை உன்னிப்பாக வாசிக்கிறான். தேவி குனிந்து கூனி நின்றாள். அவளுக்கு இந்த காமப்பிசாசை பற்றி ஏற்கனவே தெரியும். அதுவொன்றே இவனை அவள் தவிர்ப்பதற்கு போதுமாக இருந்தது.

"மகனுக்கு சுகமில்ல.. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகோணும். இண்டைக்கு மட்டும் அரை நாள் லீவு கொடுத்தீங்க எண்டா.."

"லீவே .. போன கிழமை பெரிசு என்ன சொன்னதெண்டு கேட்ட நீ தானே... லீவு எடுத்தா மெடிக்கல் சர்டிபிகட் கொண்டுவரணும். மகன் ட சர்டிபிகட் செல்லாது. உனக்கு மெடிக்கல் எடுக்கேலுமே? அப்ப போயிட்டு வரலாம்." அவனது கண்கள் இன்னும் அங்கேயே நின்றது.

"ஐயா போன கிழமை நம்மட சரோ அக்கா அரை நாள் லீவு எடுத்தவ. உங்கட்ட சொல்லிப்போட்டு தான் நின்டவ, மெடிக்கல் உம் குடுக்கயில்ல. நீங்க மனசு வச்சீங்க எண்டா.." குனிந்து கொண்டே கேட்டாள்.

"அது .. அது.. உன்னட்ட சொல்ல என்ன? உனக்கு தெரியும் தானே. சரோ நான் சொல்லுறத எல்லாம் கேட்கிறாள்..நீயும் கேட்டி எண்டா ... யோசிக்காலாம்!! லீவப்பற்றி..
அவளது கைகளை பற்றி தடவினான்..

அவளால் அதற்கு மேல் அங்கே நிற்கமுடியவில்லை. விருட்டென்று திரும்பி நடந்தாள்.

இந்த சண்டாளனைப்பற்றி பலர் புகார் கொடுத்தும் ஒண்டும் நடக்கவில்லை. புகார் கொடுத்தவர்கள் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அவன் அப்பிடியே கல்லு மாதிரி நல்லா இருக்கான். அவன்ட அண்ணன் ஏதோ அரசியல் கட்சியிண்ட தலைவர் வீட்டுல கக்கூசு கழுவுறானாம்.

"ரெண்டாயிரம் ரூபா காசும் தாறன்" 
பின்னால் நின்று மீண்டும் கூப்பிட்டது அந்த பிசாசு.

"அவள் நிற்கவில்லை"

****  ****  ****  ****

நேரம் பத்துமணி..

புற்புதர் முதுகில் குத்தியது.. மேற்பார்வை செய்யும் மிருகம் நெஞ்சில் முட்டி ஏதோ செய்துகொண்டிருந்தது. தொழில் செய்யும் இடம் தொலைவில் இருந்தது. மிருகம் ஆறாத தாகத்த்தை தீர்க்க முயன்றுகொண்டிருந்தது.. 

நிமிர்த்து படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தாள் தேவி. வானத்தில் மேகங்கள் குறைவாகவே இருந்தன.. அதிலே ஒரு விமானம் வானத்தில் கீறல் போட்டுக்கொண்டு போனது.. ஆனால் வானத்துக்கு இரத்தம் வரவில்லை.

"இந்தா பிடி ஆயிரம் இருக்கு.."

"ரெண்டாயிரம்..." என்று முனகினாள். தொண்டை அடைத்துக்கொண்டது. கேசவனின் ஞாபகம் வந்தது. எனக்கு துரோகம் செய்தாயே என்று அவனுடைய ஆன்மா கேட்பதுபோலே இருந்தது.

"அடுத்த தரம் பார்த்து தரலாம். பின்னேரம் வேலைக்கு வந்துரு."

அவன் குடுத்த நீல நிற ஆயிரம் ரூபாய் நோட்டில் ஒருவர்  கைகளை தூக்கியவண்ணம் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார்..

No comments:

Post a Comment